நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
விவசாயிகளின் நிலைமை மற்றும் நெல் கொள்முதல்
“கடந்த தேர்தல் காலத்தில் வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக் காட்டி, நெல்லுக்குக் குறைந்தபட்சம் ரூ. 150 உத்தரவாத விலை பெற்றுத் தருவதாகக் கூறியவர்கள், தற்போது அதனை ரூ. 120 ஆகக் குறைத்துள்ளனர். உண்மையில் ரூ. 120 க்குக் கூட எங்குமே நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
எதிர்பார்க்கப்பட்ட 18 முதல் 20 இலட்சம் மெட்ரிக் டொன் நெல் விளைச்சலில், அரசாங்கம் இதுவரை 40,000 மெட்ரிக் டொன் (0.2%) மாத்திரமே கொள்முதல் செய்துள்ளது. இதில் 3,000 மெட்ரிக் டொன் மாத்திரமே இதுவரை பெறப்பட்டுள்ளது.
நெல் கொள்முதலுக்கு அவசியமான நுண், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் கடன் நிலுவையாளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குக் கடனுதவிகள் கிடைப்பதில்லை. அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்று விவசாயிகளை ‘தெய்வம்’ எனக் கூறியவர்கள், இன்று அவர்களைக் ‘கசிப்புக்காரர்களாக’ முத்திரை குத்துகின்றனர். தற்போது அரிசி இறக்குமதியாளர்களே அரசாங்கத்தின் தெய்வங்களாகவும் ராஜாக்களாகவும் மாறியுள்ளனர்.”
அதிகரிக்கும் கடன் சுமையும் வீழ்ச்சியடையும் குடும்ப வருமானமும்
“பேராசிரியர் வசந்த அத்துகோரளவின் தரவுகளின்படி, வணிக வங்கிகளின் தனிநபர் கடன்கள் மற்றும் முற்பணங்கள் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 1,815 பில்லியனாகக் காணப்பட்ட நிலையில், 2026 மே மாதமளவில் ரூ. 2,580 பில்லியன் வரை (42.1%) அதிகரித்துள்ளன.
தனியார்துறை கடன் முற்பணங்கள்: 35.9% அதிகரிப்பு
தனிநபர் கடன்கள்: 42.1% அதிகரிப்பு
அடகுக் கடன்கள்: ரூ. 660 பில்லியனிலிருந்து ரூ. 1,070 பில்லியனாக (63.4%) உயர்வு
நாளாந்த வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத காரணத்தினாலேயே மக்கள் தங்களின் தங்கத்தைச் அடகு வைத்து வருகின்றனர். குடும்ப வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இக்கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், மக்கள் தங்களின் சொத்துக்களை இழந்து கடுமையான நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுவர்.
அதேநேரம், கல்விக்காகப் பெறப்பட்ட கடன்கள் 57% குறைந்துள்ளன. மக்கள் தங்களின் சேமிப்பு மற்றும் நகைகளை முதலீடுகளுக்குப் பதிலாக, நாளாந்த நுகர்வுக்கே பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும்.”
700 கல்வியியல் பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறி
“கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 700 பட்டதாரிகளுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்களை மீண்டும் போட்டிப் பரீட்சைகளை எதிர்கொள்ளுமாறு கூறுகின்றனர்.
கல்வியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பட்டத்திற்குப் போட்டிப் பரீட்சை அவசியமில்லை. ஏனைய மாகாணங்களில் போட்டிப் பரீட்சைகளின்றி பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. இதனால் இந்த 700 பட்டதாரிகளும் இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளனர்.”
தனிக்கட்சி ஆட்சியை நோக்கி அரசாங்கம்:
நீதித்துறைக்கு அழுத்தம்
“நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் குழுவில் அண்மையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை, சுதந்திர ஊடகம் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றில், நீதித்துறை தொடர்பான விவாதம் ஒன்றைக் கோரியபோது அரசாங்கம் அதற்கு அனுமதி மறுத்தது. சபையில் நீதித்துறை பற்றியோ, அதனைப் பலப்படுத்துவது பற்றியோ பேச முடியாது எனக் கூறுவது ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியை நோக்கிச் செல்லும் முயற்சியாகும்.
மேலும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது சுயாதீன நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட மரண அடியாகும்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.










