யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
‘யாழ்ப்பாண நண்பர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தச் சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டி இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
விளையாட்டின் ஊடாகப் பிரதேசங்களுக்கிடையிலான நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிநேகபூர்வ தொடரில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கரப்பந்தாட்ட அணி, மலையக விளையாட்டுக் கரப்பந்தாட்ட அணி மற்றும் தமிழகத்தின் சென்னைக் கரப்பந்தாட்ட அணி ஆகிய மூன்று பிரதான அணிகள் பங்குபற்றித் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தின.
இந்த விளையாட்டு நிகழ்வில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் கௌரவ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தி.வேல்நம்பி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.










