நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள்.
பா.நிரோஸ்










