“இந்தியாவின் ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் இலங்கையால் தனித்து இயங்க முடியாது. எனவே, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:
“காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் அதனை ஏற்றுச் செயல்படுத்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது.
நாம் தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், நாட்டுக்கு நன்மை பயக்கும் இந்தியத் திட்டங்களை எதிர்க்க மாட்டோம். எனவே, அரசாங்கம் எவ்வித அச்சமுமின்றி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்.
இந்திய உதவியைப் பெற்று இத்துறைமுகத்தைக் கட்டியெழுப்பினால் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்; புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களும் வடக்கிலேயே முதலீடு செய்வார்கள். அதுமட்டுமன்றி, தென்னிந்திய சந்தையை நாம் சுலபமாக அணுகக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியா இத்துறைமுகத்தை நிர்வகித்த பின்னர், அது முழுமையாக எமது நாட்டுக்கே உரித்தாகும்; அதனை இந்தியா எடுத்துச் சென்றுவிடப் போவதில்லை.
அதேபோல, இந்திய ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாடே முதன்மையாக வந்து உதவிகளை வழங்கியதுடன், வெளிநாட்டுக் கடன்களுக்காக இலங்கை சார்பில் பிணைநின்றதும் குறிப்பிடத்தக்கது” என்று எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.










