நாட்டில் அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொது வேட்பாளர் நிச்சயமாகக் களம் இறக்கப்படுவார். எனவே, 2029 இல் அரசியல் ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை நாடு சந்திக்கவுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணித் தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விஷேட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26) அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் இடம்பெற்றது,
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்,
அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் விமர்சிக்காமல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒரு வருட காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வருட காலமாக குறிப்பிடத் தக்க அபிவிருத்திப் பணிகளோ முன்னேற்றமோ இடம்பெறவில்லை.
எனவே, வாக்களித்த மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது. 2015 – 2019 வரையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் நாட்டில் ஏற்பட்ட ஒரு பொற்காலம் ஆகும்.
இன்று தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளமை வரவேற்கத் தக்க காலத்துக்கு தேவையான நல்ல திட்டமாகும். அதன் தலைவர்கள் எதிர்வரும் 3 ஆந் திகதில் ஜனாதிபதியை சந்தித்து மலையக மக்களுக்கும், தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்கள்.
இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனென்றால் இதற்கு முன்னர் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நானும், மனோ, ராதாவும் மூன்று முறை ஜனாதிபதியை சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தும் கெஞ்சிக் கேட்டும் எதுவும் நடக்கவில்லை.
நாங்கள் சந்திக்கும் போது சரியென்று கூறுகின்ற ஜனாதிபதி, காணி எங்கே இருக்கின்றது என்று எம்மிடமே கேட்கின்றார். வீடு கட்டுவதற்காக காணியைத் தெரிவு செய்யும் போது சில தேயிலைச் செடிகளை பிடுங்க வேண்டியிருக்கும். அதைச் செய்யாமல் வீடமைப்பு என்பது சாத்தியமில்லை.
அத்தோடு, இந்திய வீடமைப்புத் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருகின்றார்கள். இதனால் எதிர்பார்ப்போடு வாக்களித்த மலையக மக்கள் இன்று விரக்திக்கு ஆளாகி எமக்கு ஆதரவு தர முன்வருகின்றார்கள். அதனால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருந்த நல்லெண்ணம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.
மலையகத்தில் இரண்டு பெரும் அமைப்புகளாக இ.தொ.கா.வும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் காணப்படுகின்றன. இந்த இரண்டு அமைப்புகளும் அரசியல் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்களை யார் யாரோ அடித்துத். துன்புறுத்தி வருகின்றார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. இதன் தாக்கம் 2029 தேர்தலில் எதிரொலிக்கும்.
ஊழல் செய்தவர்களை கைது செய்து விசரணை செய்து தண்டனை வழங்குவது நியாயமானது. ஆனால், அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்றவர்களையும், விமர்சிக்கின்றவர்களையும் கைது செய்வது அநீதியானதாகும். அரசாங்கத்தோடு இணக்கமாக இருந்து காணி உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது போராட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டும்.
இந்நிலையில், இதுவரை ஒன்று சேராமல் இருந்த ரணிலும் சஜித்தும் ஒன்றுபடப் போகின்றார்கள். ஏனைய கட்சிகளின் ஆதவும் கிடைக்கும். அதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் தேர்தல்களில் பொது வேட்பாளரைக் களம் இறக்கி 2029 இல் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றார்.










