வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 60 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ‘எயார் ஏஷியா’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த 40 வயதுடைய சீனப் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 201 கார்ட்டூன்களில் அடைக்கப்பட்ட 40 ஆயிரத்து 200 சிகரெட்டுகளை நுட்பமான முறையில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தைப் பெறுமதி 60 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா எனச் சுங்க அதிகாரிகள் கணிப்பிட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அறிவிக்கப்பட வேண்டிய பொருள்கள் எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் “பச்சை வழி” ஊடாகச் சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையிலேயே இந்தச் சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கைக்குள் உரிய சுங்க வரி செலுத்தாமல் வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கொண்டுவருவது சட்டப்படி தடை செய்யப்பட்ட குற்றமாகும். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜையிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளை அரசுடைமையாக்குவதற்கும் அபராதம் விதிப்பதற்குமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles