உக்ரைன் மீது ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதில் ஒரு ஏவுகணை எல்லை தாண்டி போலந்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, நேட்டோ (NATO) தனது போர் விமானங்களை அவசரமாகப் பறக்கவிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளிடமிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உக்ரைனுக்குக் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா முயன்று வரும் நிலையில், தலைநகர் கெய்வ் உட்பட உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது இந்தத் தீவிரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கெய்வ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுரங்கப் பாதை ரயில் நிலையங்களில் இரவைக் கழித்துப் தஞ்சமடைந்தனர்.
இந்தத் தாக்குதலின் போது ரஷ்ய ஏவுகணை ஒன்று போலந்து வான்வெளிக்குள் நுழைந்து ஒரு கிராமப்புறப் பகுதியில் விழுந்ததாக நேட்டோ தெரிவித்துள்ளது. இதனால் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்றாலும், 4 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் இந்தப் போர் தங்கள் எல்லைக்கும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், “இது ரஷ்யாவின் மற்றொரு பொறுப்பற்ற செயல் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரின் ஆபத்தான விளைவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) கூறுகையில், “இது ஒரு மிகக் தீவிரமான சம்பவம், ஆனால் போலந்து இலக்கு வைக்கப்பட்டதாக நம்புவதற்கு எவ்வித காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஆயுதங்கள் சேமிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதாகக் கருதப்படும் உக்ரைனின் பகுதிகளை இலக்கு வைத்தே ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ரஷ்யாவின் எண்ணெய் துறையைத் தாக்கி அழித்துள்ளதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுப்பதற்கான ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாகவும் அதிகளவிலும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் இருப்பு குறைந்துள்ளது. உக்ரைன் சொந்தமாக பேட்ரியாட் அமைப்புகளை தயாரிப்பதற்கான உரிமைகளை வழங்குவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார், இருப்பினும் இதன் உற்பத்திக்கு பல மாதங்கள் ஆகலாம்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அதிபர் செலென்ஸ்கி, “எங்களது பங்காளிகளிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், எங்களது வீரர்கள் மிக உயர்ந்த தொழில்முறைத் திறனை வெளிப்படுத்தி உண்மையிலேயே நம்பமுடியாத காரியங்களைச் செய்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ரஷ்யாவின் இந்த பயங்கரவாதச் செயல், எமது மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் ரஷ்ய ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதே மிக முக்கியமான பணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
