பதுளை பிரதேச சபைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அப்பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்தும் பொது மக்களும் கடுமையாக அச்சமடைந்துள்ளனர்.
வேவெஸ்ஸ மத்திய பிரிவின் 14, 19 ஆம் இலக்கங்களை கொண்ட இறப்பர் தோட்டங்களிலேயே காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன.
அண்மையில் இறப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளி காட்டெருமைகளினால் விரட்டப்பட்டதன் காரணமாக ஓடி விழுந்து காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.
பகல் நேரங்களிலும் வினீத்தகம பிரதான பாதை மற்றும் குறித்த பிரிவின் பாதைகளிலும் எவ்வித அச்சமும் இன்றி கூட்டமாக காட்டெருமைகள் நடமாடுவதால் பொதுமக்களின் இயல்பான நடமாட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு வேவெஸ்ஸ தோட்ட நிர்வாகமும், பதுளை பிரதேச சபையும் காட்டெருமைகளை காடுகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இறப்பர் தோட்டங்களை முறையாக பாரமாரிக்க அவற்றில் படர்ந்துள்ள பற்றைக் காடுகளை அழிக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
பசறை நிருபர்










