முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்கவினால், இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. என்.பீ.எஸ். பீ.எஸ்.சீ. லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் இன்று (31) பிற்பகல் அவரிடம் கையளி்க்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இப்பதவி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (31) தனது பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.
மாத்தறை புனித சேவியர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பிரேமரத்ன, 1990 ஆம் ஆண்டு பயிலுநர் கெடற் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1992 ஆம் ஆண்டு தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இரண்டாம் தர லெப்டினன்ட்டாக நியமனம் பெற்றதுடன், பின்னர் இலங்கை பீரங்கிப் படையணியின் பீரங்கி அதிகாரியாக சேவையில் இணைந்தார்.
அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்படை பட்டப்பின்படிப்புப் பாடசாலையில் பாதுகாப்பு கல்வி தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும், களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கல்வி தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும் (M.Def.S) பெற்றுள்ளார்.
36 வருட கால சிறந்த இராணுவ சேவைக் காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தொழில்சார் மற்றும் விசேட பயிற்சி நெறிகளைப் பயின்றுள்ள பிரேமரத்ன, மனிதாபிமான நடவடிக்கையின் போது வெளிப்படுத்திய துணிச்சலுக்காக ‘ரணசூர’ பதக்கத்தை இரு முறையும், இராணுவ வாழ்க்கையில் வெளிப்படுத்திய சிறப்பான சேவையைப் பாராட்டி ‘உத்தம சேவா’ பதக்கத்தையும் பெற்றுள்ளார்.










