1990 ‘சுவசரிய’ அமைப்பின் 10ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (31.07.2026) காலை கொழும்பு, இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘சுவசரிய’ அமைப்பின் நிறுவுனரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
10 ஆண்டுகளில் 2.6 மில்லியன் உயிர்கள் காப்பு
இந்திய அரசாங்கத்தினதும் மக்களினதும் நன்கொடையளிக்கப்பட்ட பங்களிப்புடன், 2016 ஜூலை 28 அன்று 88 ஆம்புலன்ஸ்களுடன் தொடங்கப்பட்ட 1990 ‘சுவசரிய’ சேவையானது, இலவச மருத்துவ அவசரக்காலச் சேவையாக இலங்கைச் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
தற்போது 319 ஆம்புலன்ஸ்களுடன் நாடு தழுவிய அளவில் இயங்கிவரும் இச்சேவை, பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான அவசரத் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ள சுவசரியப் பணியாளர்கள், 2.6 மில்லியனுக்கும் அதிகமான அவசரச் சந்தர்ப்பங்களில் விரைந்து சென்று நோயாளிகளின் உயிரைக் காத்துள்ளனர்.
24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் இச்சேவை, அவசர சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு நம்பிக்கையின் முதன்மை மையமாக மாறியுள்ளது.
சுவசரியப் படையில் மேலும் 150 ஆம்புலன்ஸ்கள்
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதன் மூலம் ஒரு தனிநபரின் வாழ்க்கை மட்டுமன்றி, ஒரு குடும்பத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலமுமே பாதுகாக்கப்படுகிறது. இது மனிதநேயத்திற்கான ஒரு தேசிய பணியாகும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள கூடுதல் 100 ஆம்புலன்ஸ்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் சேவையில் சேர்க்கப்படும் என்றும், டாடா அறக்கட்டளையின் (Tata Trust) உதவியுடன் மேலும் 50 ஆம்புலன்ஸ்கள் பெறப்பட்டு, சுவசரிய ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 470 ஆக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறப்பு முத்திரை மற்றும் செயலி அறிமுகம்
இவ்விழாவின் போது, 10ஆவது ஆண்டு நிறைவு நினைவாகச் சிறப்பு முத்திரை, நினைவு உறை மற்றும் புதிய நவீன தொழில்நுட்பம் சார்ந்த மொபைல் செயலி (Mobile App) என்பன அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக வெளியீடப்பட்டன. அத்துடன், ஆரம்பம் முதல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 160 பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க, சுவசரிய அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிரோஷன் ரத்நாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.










