நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற அனர்த்தங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போன ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் 2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வானிலை நிலைவரம்
தற்போது நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைந்து, வானிலை சீரடைந்து வருகின்ற போதிலும், பல இடங்களில் மேகமூட்டமான நிலையே காணப்படுகின்றது.
இடம்பெயர்ந்தோர் மற்றும் நலன்புரி முகாம்கள்
நலன்புரி முகாம்களில்: 20 முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் வீடுகளில்: 224 குடும்பங்கள் தங்கியுள்ளன.
வீடுகளுக்குத் திரும்பியோர்: வெள்ளநீர் வடிந்து வருவதால் 347 குடும்பங்கள் இதுவரை தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். நலன்புரி முகாம்களில் உள்ள ஏனையோரையும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீதிப் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள்
பிரதேச செயலாளர்களின் தலைமையில் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.










