நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முதல் இடைவிடாது பெய்து வரும் மழையால், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக பல இடங்களில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருவதால், வாகன நெரிசலும் பயண தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லன் மற்றும் குயில்வத்தை பகுதிகளில் பாரியளவில் மண் சரிந்து வீதியை மறைத்ததால், ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.
இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, வீதியில் குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தன. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மேலும் தளர்ந்துள்ளன. இதனால் எந்நேரமும் புதிய மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மண்சரிவின் தாக்கத்தால் பல பகுதிகளில் மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக மல்லியப்பு, ஸ்ரதன் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்விநியோகத்தை மீளமைக்கும் பணிகளில் இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தொலைத்தொடர்பு சேவைகளையும் விரைவாக வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையால் அப்பகுதி மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மின்சாரத் தடை மற்றும் தொடர்பாடல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கண்டி நோக்கி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால், வழமையை விட குறைந்த எண்ணிக்கையிலான தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களும், பிரதான வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புடன் செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலைவாஞ்ஞன்










