நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தனிநபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசமைப்புத் திருத்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இது குறித்து எம்மிடம் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. நாம் கலந்துரையாடலுக்கு நேரம் கோரியபோதும், உரிய காலப்பகுதிக்குள் அது வழங்கப்படவில்லை.
இந்த முன்மொழிவு பொருத்தமானது அல்ல என்பதை மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையும் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஏனைய மதத் தலைவர்களும் இது குறித்த தமது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறோம்.
எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்; இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வரும். பிரான்ஸிலுள்ள முக்கிய சட்டத்தரணிகள் சங்கம் ஒன்றும் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.” – என்றார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்.










