இலங்கையின் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, வட்டி வீதங்கள், ரூபாயின் நிலை உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்களை உள்ளடக்கிய 2026 ஓகஸ்ட் மாத நாணயக் கொள்கை அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது 2026ஆம் ஆண்டில் வெளியிடப்படும் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையாகும்.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சராசரியாக 2 வீதமாக இருந்த பணவீக்கம், அண்மையில் வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு, உள்நாட்டில் எரிபொருள் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பரவியமை இதற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்றாலும், பின்னர் அது மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி கடந்த மே மாதம் தனது நாணயக் கொள்கையை இறுக்கமாக்கியிருந்தது. 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து பின்பற்றப்பட்ட தளர்வான நாணயக் கொள்கை இதன் மூலம் மாற்றப்பட்டதுடன், சந்தை வட்டி வீதங்களும் அதன் பின்னர் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், தனியார் துறைக்கான கடன் வழங்கல் வலுவாக அதிகரித்திருந்தாலும், வட்டி வீத உயர்வு மற்றும் இறுக்கமான நிதிச் சூழல் காரணமாக எதிர்வரும் காலத்தில் கடன் வளர்ச்சி ஓரளவு மந்தமடையும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. அதிகரித்த இறக்குமதிகளும் பொருளாதாரத்தில் கடனுக்கான கேள்வியை உயர்த்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுத் துறையிலும் புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் வாகன இறக்குமதிகள் அதிகரித்தமை காரணமாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மேலதிக நிலையைக் காட்டிய நடப்புக் கணக்கு, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. எனினும், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணவனுப்பல்கள் இந்த அழுத்தத்தை ஓரளவு சமாளிக்க உதவியுள்ளன. அதேவேளை, கடன் மீளச்செலுத்தல்கள் காரணமாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்பிலும் ஓரளவு குறைவு ஏற்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நிலையான போக்கைக் காட்டிய இலங்கை ரூபா, மார்ச் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறுமதி குறைவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களின் தாக்கமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதேநேரம், அரசாங்கத்தின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் காரணமாக 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அரச நிதிநிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியும் தொடர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.1 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எனினும், எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு பல அபாயங்கள் உள்ளதாக மத்திய வங்கி எச்சரித்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள் மீண்டும் தீவிரமடைதல், உலக சந்தையில் பொருட்களின் விலைகள் திடீரென உயர்தல், சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் எல் நினோவுடன் தொடர்புடைய மோசமான காலநிலை போன்றவை இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர காலத்தில் பணவீக்க எதிர்பார்ப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்தாலும், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் காரணமாக பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் தொடர்ந்தும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கவும், விலைவாசி அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவும் இறுக்கமான நாணயக் கொள்கையைத் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய வங்கியின் ஓகஸ்ட் மாத அறிக்கை வலியுறுத்துகிறது.










