“நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, எத்தனை முறை அழைத்தாலும் அச்சமின்றி விசாரணைக்கு வந்து சவாலை எதிர்கொள்வோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியே வந்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“தங்காலையிலுள்ள ஹோட்டல் ஒன்று தொடர்பிலேயே என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. எவரேனும் தான் ஒரு ஹோட்டலை வாங்கிய விதத்தைப் பற்றி விவரிக்க முடியாவிட்டால், அது ‘நாமல் ராஜபக்சவின் ஹோட்டல்’ என்று கூறும் நிலைமையே தற்போது காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் எனக்குப் பல ஹோட்டல்கள் இருந்ததாகவே கூறப்பட்டது.
பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கம் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. நாங்கள் தவறு செய்யவில்லை. எனவே, அவர்கள் அழைக்கும் ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு ஆஜராவேன். நாட்டின் நீதிமன்றங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இன்று பொலிஸ் துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. (JVP) அலுவலகத்திலேயே விசாரணைகள் குறித்துத் தீர்மானிக்கப்படுகிறது. நான் அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டிய திகதியும் பெலவத்தையிலேயே முடிவு செய்யப்படும்” என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
