மூன்று வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னர் என்ற பெருமையைப் பெற்ற உகாண்டாவின் டூரோ இராச்சிய மன்னர் ஒயோ நியிம்பா கபாம்பா இகுரு ருகிடி, தனது 34வது வயதில் காலமானார்.
குழந்தைப் பருவத்திலேயே ஒரு இராச்சியத்தின் பொறுப்பை ஏற்ற அவர், தனது வாழ்நாள் முழுவதும் டூரோ மக்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சமூக முன்னேற்றத்துடன் இணைந்திருந்தார்.
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
உகாண்டா ஒரு குடியரசு நாடாக இருந்து, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் அரச தலைவரால் நிர்வகிக்கப்பட்டாலும், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்திலிருந்து இருந்து வந்த சில பாரம்பரிய இராச்சியங்கள் அந்நாட்டில் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு நேரடி அரசியல் அதிகாரம் அதிகமாக இல்லாவிட்டாலும், சமூக மற்றும் கலாசார ரீதியில் பெரும் செல்வாக்கு உள்ளது.
மேற்கு உகாண்டாவில், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டூரோ இராச்சியத்தின் மன்னராக ஒயோ நியிம்பா இருந்து வந்தார்.
ஒயோ நியிம்பாவின் தந்தையான மன்னர் ருகிரபசைஜா பற்றிக் டேவிட் மெத்தியூ கபோயோ ஒலிமி மூன்றாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 1995 செப்டம்பர் 12ஆம் தேதி வெறும் மூன்று வயதில் அவர் மன்னராக முடிசூட்டப்பட்டார். இதன் மூலம் அப்போது உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னராக அவர் அறியப்பட்டார்.
மிக இளம் வயதில் தொடங்கிய ஒரு மன்னரின் பயணம், 34 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது உகாண்டா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
