அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மகளிர் சக்தியின் இரத்தோட்டைத் தொகுதி ஸ்தாபகக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு, நீதியின் ஆட்சி சீரழிந்து செல்கின்றது. ஏலவே நாளாந்தம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் நீதியின் ஆட்சி குறைந்திருக்கும் நாட்டில், 22ஆவது திருத்தம் மூலம் அது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், அப்போதைய அரசு 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று கூறினார்.
ஆனால், இன்று சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்று அரசைச் சேர்ந்தவர்களே கூறி வருகின்றனர். அன்று 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தபோது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியதைப் போல், 22ஆவது திருத்தத்துக்கும் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமல்லவா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றேன்.
இந்த அரசு மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறும், மக்கள் இறையாண்மைக்கு இடமளிக்காத, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மதிக்காத ஓர் அரசாகக் காணப்படுகின்றது. இந்தப் சர்வாதிகாரப் போக்கு இளைஞர் கழகத் தேர்தல் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுத் தேர்தல்களில் இருந்தே தொடங்கியது. பெலவத்தையின் பட்டியலின்படி உறுப்பினர்களை நியமித்த இந்த அரசு ஜனநாயகத்தைச் சீரழித்துவிட்டது. மக்களின் உரிமைகளைப் பறித்து, சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியைக்கொண்டு வர முற்படுகின்றது.
மேலும் பல பொய்களை அள்ளிக் கொட்டவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது நாடெங்கும் பேரணிகளை நடத்தி வருகின்றார். பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டு, இறுதியில் மேலும் பொய்களைக் கூறும் பொய் பேரணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டுமானால், பொய்ப் பேரணிகளை நடத்துவதை விட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றேன்.
இன்று பேருவளைக் கூட்டத்தின் காரணமாகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் பேருவளைத் துறைமுகத்துக்கு உள்ளே வர முடியாதவாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டங்களை நடத்தக்கூட ஜனாதிபதிக்கு முடியாமல் போயுள்ளது.
இன்று நாட்டை ஆட்சி செய்யும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பிரதான அடிப்படைக் கொள்கை கொடுங்கோன்மை, அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் உரிமைகளை நீக்குவது என்பனவாகும். மக்களின் துயரைத் துடைப்பதற்குப் பதிலாக மக்களின் துயரை மேலும் அதிகரித்து வருகின்றனர்.
இதனால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அரசுக்கு மறந்துபோய்விட்டன. இவர்கள் நாட்டுக்கு ஆக்கபூர்வமான எதையாவது செய்வதற்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காகப் பேரணித் தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அரசின் கூட்டத் தொடரின் பிரதான தொனிப்பொருள் ‘நமது அரசாங்கம்’ – ‘ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணிகள் என்பதாகக் காணப்பட்ட போதிலும், இன்றும் ‘டித்வா’ சூறாவளியால் இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் தருவோம், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் போன்ற எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளையே ஏற்றியுள்ளனர்.
இன்று பாரிய மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதுடன் அவசரச் சத்திர சிகிச்சைகளைச் செய்வதற்குகூட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளமை நாட்டுக்கு மாட்சியா என கேட்கின்றேன். இந்த இரண்டு ஆண்டுகள் மாட்சியாக மாறியிருப்பது ஜனாதிபதிக்கும் அரசுக்குமே தவிர நாட்டுக்கு அல்ல.” – என்றார்.
