நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும்கூட, அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராவது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேலும் கூறியதாவது:
“2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றிபெறுவது உறுதி என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். நாமல் ராஜபக்சவின் ஆட்சியில் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முழுமையான சுதந்திரத்தை அவருக்கு வழங்குவோம்.
எனக்கு பிரதமர் பதவியை விடக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியே முக்கியமானது. அதில் பொறுப்புகள் அதிகம் என்பதால், அதனைச் சிறப்பாகச் செய்வதே எனது முதன்மை எதிர்பார்ப்பாகும்.
ஒருவேளை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், உடனடியாகப் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டாலும் நாமல் ராஜபக்ச பிரதமராவது உறுதியாகும்” என்று சாகர காரியவசம் தெரிவித்தார்.
