“தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார். தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன். உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள்.தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மக்களின் சொத்தாக மாற்றப்படும் வரை இவர்களுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.
தினகரன் ஞாயிறு இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணலில் ஒரு பகுதி வருமாறு,
கே: கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து உங்களை நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளனவே ?
2021 – பெப்ரவரி – 10 ம் திகதியுடன் அத்கைய பொறுப்புகளில் இருந்து முடிவுறுத்திக் கொள்வதான தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டு ஓய்வாக இருக்கிறேன். ஆனாலும் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை விடுகிறார்களே அன்றி அதற்கான காரணத்தை கூறுகிறார்கள் இல்லை.
அதனால் நானே அதற்கான காரணத்தையும் கூறவேண்டி இருக்கிறது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார். தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன். உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள். அவர் கட்சி தலைமையகத்தை கையகப்படுத்திக்கொண்டு செலவு செய்வது எப்படிச் சரியாகும்?
1965 ஆம் ஆண்டு முதல் அமரர் வி.கே. வெள்ளையன் கட்டிவளர்த்த சங்கத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதே எனது உறுதியான முடிவு. சங்கத்துக்கு உள்ளே இருந்த போதும் வெளியே வந்தபோதும் அதற்காக குரல் கொடுப்பேன். தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மகளின் சொத்தாக மாற்றப்படும் வரை இவர்களுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும்.
கே: 2020 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் இருந்தபோதுபோது தொலைபேசி சின்னத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவாக இல்லை என்ற செய்தியை புரிந்து கொண்டிருந்தீர்களா?
நிச்சயமாக. தெரிந்ததனால்தான் எனது தேர்தல் வியூகத்தையே மாற்றியமைத்திருந்தேன். சிங்கள மக்கள் மாத்திரமல்ல; தமிழ் மக்களே கூட ஆதரவாக இருக்கவில்லையே! அதற்கு நுவரெலிய மாவட்டமே நல்ல உதாரணம். தொலைபேசி சின்னத்தைவிட மொட்டு அணிக்கே அதிக ஆசனத்தையும் விருப்பு வாக்குகளையும் வழங்கி இருந்தார்கள்.
தொலைபேசி சின்னம் தன்னுடன் இணைந்திருக்கும் சிறு கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் வழங்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெறாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவேதான் அதில் எதிர்பார்ப்பு கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் பிரசாரத்துக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேன். இப்போது நான் மாவட்ட மக்களை ஏமாற்றவில்லை என்ற திருப்தி எனக்குள் நிரப்பவே இருக்கிறது. எனக்கு தேசிய பட்டியல் தருவதாக கூறி மக்களிடத்தில் வாக்குகளை வாங்கிக் கொண்டவர்கள் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தாங்கள்தான் அமைச்சுப் பதவியைப் பெறுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தும் வாக்கு வாங்கினார்கள். இரண்டுமே நடக்கவில்லை.
எனக்கிருந்த பிரபலத்தை இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்காத இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். முழு மூச்சாக அதற்காக உழைத்தேன். வெற்றிக்கணி கிடைக்காவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் தெரிந்தது. அடுத்த முறை இரத்தினபுரியில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கே: மாகாணசபைத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படுமானால் மத்திய மாகாண சபைக்கு போட்டியிடும் (சுயேச்சையாகவேணும்) எண்ணம் உள்ளதா?
மாகாண சபைத் தேர்தல் வருமா என்பது சந்தேகமே. அப்படி வந்தால் எனது முடிவு எப்படியானதாக இருக்கும் என்பதை அறிவிப்பேன். அதற்கான நேர்த்தியான திட்டம் ஒன்று குறித்து இப்போதும் உரையாடல்களை நடாத்தி வருகிறேன்.
கே: மலையக அரசியல் பலம் பொருந்தியதாக அமைந்திருந்த காலம் ஒன்றிருந்தது. மலையக அரசியலை இப்போது எவ்வாறு நோக்குகிறீர்கள்?
அரசியல் பலம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. எமது மக்கள் வாக்குகளை சரியாகத்தானே வழங்கி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றில் இருந்த ஒன்பது ஆசனங்கள் இந்த முறையும் உண்டு. அமைச்சுப் பதவிகளும் உண்டு.
அமைச்சுப் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதிவுகளையும் கொண்டு எப்படி பணியாற்றப் போகிறோம், அதற்கான கொள்கைத் திட்டம் என்ன, வேலைத்திட்டம் என்ன என்பதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனைக் கூறி வாக்கு கேட்டார்களோ அதனை வென்றெடுக்கும் வேலைத்திட்டமும் அவசியம்.
நேர்காணல் – பி. வீரசிங்கம்
