துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் திகதி முதல் 7-ம் திகதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 900க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.
60க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைபிள் கிளப், மதுரை ரைபிள் கிளப், கோயம்புத்தூர் ரைபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.
இதில் சென்னை ரைபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
