இனிதான் எனது ஆட்டம் உச்சம் தொடும் – ஷகிலா

”இப்போது தான் அரசியலில் நுழைந்துள்ளேன். இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” என நடிகை ஷகிலா கூறினார்.

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின.

அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு ‘பவர்’ வேண்டும்.

நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும்.

கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளை அதிரடியாக விமர்சித்து பேசுவீர்களா?’, என்று நிருபர்கள் ஷகிலாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஏன்… இப்பவே இத்தனை கேள்வி கேக்குறீங்க… அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க, என சிரித்தபடி கூறினார்.

Related Articles

Latest Articles