பசறை பஸ் விபத்தில் பலியான 14 பேரின் பாக்கியநாதன் யோகதாஸ் என்பவரும் ஒருவராவார். இவரது இழப்பினால் அவரது ஐந்து பிள்ளைகளும், அவரது மனைவியும் பெரும் துயரில் இருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. தமக்கு எவரும் உதவமாட்டார்களாவென்று ஏக்கப்பெருமூச்சு விட்ட நிலையில் அவர்கள் உள்ளனர்.
பசறை – மீதும்பிட்டிய பி. பிரிவு பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 53 வயது நிரம்பிய பாக்கியநாதன் யோகதாஸ், மேற்படி விபத்தில் பலியானார். இவரது மனைவி வேலு சகாயமேரி வயது – 46, மேற்படி தோட்டக்குடியிறுப்பில் வசித்து வந்த போதிலும், சுகவீனம் காரணமாக அவரால் தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ளார்.

மகன் யோகதாஸ் வினோத் – வயது 26, க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்து, க.பொ.த. உயர்தரத்திற்கு தெரிவாகியும், கல்வியைத் தொடர முடியாத நிலையில் தற்போது அவர் தனியார் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மகன் யோகதாஸ் நிஸ்வதனன் – வயது 24. ஆண்டு 10 வரை கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
மகள் யோகதாஸ் அனிஷா – க.பொ.த. உயர்தர கலைப்பிரிவில், லுணுகலை இராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.
மகன் யோகதாஸ் ஜோசப் பிரசாத் – வயது 13. ஆண்டு 8ல் படித்துக் கொண்டிருக்கின்றார்.
மகன் யோகதாஸ் அபிஷேக் – வயது 10. ஆண்டு 5ல் படித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்பிள்ளைகளின் தகப்பனான பாக்கியநாதன் யோகதாஸ் பசறை நகரில் கட்டிட நிருமாணப் பணியில் ஊழியராக இருந்து வந்துள்ளார். இவருக்கு கிடைத்து வந்த சம்பளத்தில் மேற்படிக் குடும்பம் வழிநடாத்தப்பட்டு வந்தது. அத்துடன், யோகதாஸ் வினோத் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து வருகின்றார். இவரது சம்பளமும், மேற்படி குடும்பத்தினரின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பாக்கியநாதன் யோகதாஸ் பசறை பஸ் விபத்தில் பலியானதினால், யோகதாஸ் வினோத் என்பவருக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் இக் குடும்பத்தின் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாத அவலம் மேலிட்டு, அவர்கள் வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருகின்றனர்.
இந் நிலையில், விபத்தில் பலியானவரின் மனைவி 46 வயதுடைய வேலு சகாய மேரியை சந்திக்க, அவரது குடியிறுப்பினை நாடிச் சென்ற போது, அவர், ‘எமது குடும்பத்தின் மேம்பாடுகள் குறித்து, பிள்ளைகளது கல்வி அபிவிருத்தி குறித்தும் கூடிய கவனம் எடுத்து, எனது கணவர் செயற்பட்டார். மூன்று பிள்ளைகளையாவது நல்ல முறையில் படிப்பிக்க வேண்டும். நன்றாகப் படித்து தொழில் செய்யும் போது, அவர்களின் நிழலில் நாமும் வாழ்க்கை நடாத்தலாமென்று அடிக்கடி என்னிடம் கூறுவார். பெரும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. அவர் எடுக்கும் சம்பளத்தில் எமது குடும்ப வாழ்க்கை, வறுமையிலும் செம்மையாக அமைந்திருந்தது.
எனது கணவர் வழமைபோன்று, கடந்த 20ந் திகதி காலை குறிப்பிட்ட தனியார் பஸ்சில் பசறைக்கு தொழிலுக்காகப் புறப்பட்டார். அவர் சென்று சில நிமிடங்களில் அப் பஸ் விபத்துக்குள்ளாகியதையறிந்து, அவ்விடத்திற்கு நாங்கள் ஓடிச் சென்றோம். அங்கு ஒரே கூட்டம். காயப்பட்டவர்களையும், இறந்தவர்களையும் அம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றுக்கொண்டிருந்ததைக் கண்டோம். ஆனால், எனது கணவரை என்னாலோ, பிள்ளைகளாலோ பார்க்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்றுதான் எனது கணவரை, என்னாலும் பிள்ளைகளாலும் பார்க்க முடிந்தது.
அவருடன் நாங்களும் இறந்திருந்தால் நன்றாயிருக்கும். எம் ஒவ்வொருவருக்கும் பேச்சே வரவில்லை. அழுகையை கட்டுப்படுத்தவே முடியாது போய்விட்டது.
எமது கனவு, எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சுக்குநூராகின. எனது பிள்ளைகளுக்காக நான் விரும்பியோ, விரும்பாமலோ வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
எனது பிள்ளைகள் இருவருக்காவது அரச தொழில் வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், எமது வாழ்வாதாரங்களை சீரமைத்துக் கொள்ளலாம்.

அத்துடன், எனக்கு கோழி வளர்ப்பு போன்ற சிறு கைத்தொழில்களை மேற்கொள்ள எவராவது உதவுவார்களேயானால், அவர்களுக்கு கோடி புண்ணியம் கிட்டுமென்று, கண்ணீர் மல்கக் கூறினார்.
வசதிபடைத்தவர்கள் எவராவது இக்குடும்பத்தினருக்கு உதவ முன் வருவார்களேயானால், வேலு சகாயமேரி, சம்பத் வங்கி பசறைக்கிளை சேமிப்புக்கணக்கு இலக்கம் 114654558125 என்றதற்கமைய நிதி உதவிகளை வழங்க முடியும்.
சொலமன் அவர்கள்
சொலமன் அவரகள் கருத்துத் தெரிவிக்கையில், ‘பாக்கியநாதன் யோகதாசின் மரணத்தையடுத்து, அவரது குடும்பம் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புடன் பாக்கியநாதன் யோகதாஸ் இருந்து வந்தார். அவரது கனவு நனவாகும் வகையில், அவரது பிள்ளைகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், அக் குடும்பத்தினர் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்றார்.
மாரி சண்முகநாதன்
யோகதாசின் சகோதரன் மாரி சண்முகநாதன் கருத்துத் தெரிவிக்கையில், ‘யோகதாசின் பிள்ளைகளுக்கு ஏதும் நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், அவர்களின் குடும்பத்தை மீளவும் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்’ என்றார்.
மகள் அனிஷா
விபத்தில் பலியான யோகதாசின் மகள் அனிஷா கருத்துத் தெரிவிக்கையில், ‘எனது அப்பாவின் எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாது. எது எப்படியிருந்த போதிலும் அப்பாவின் கனவை நனவாக்கும் வகையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் செல்வேன். எனது அப்பாவினதும் அம்மாவினதும் விருப்பப்படி ஆசிரியையாவேன். அதுவே எனது இலக்கு, அவ் இலக்கை நோக்கிய எனது பயணம் தொடரும்’ என்றார்.
எம். செல்வரா, பதுளை










