பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறவுள்ளது. இது இ.தொ.காவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் புத்தாண்டு பரிசாகவும் அமைந்துள்ளது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சௌமியபவனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஆயிரம் ரூபா தொடர்பில் சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக , எதிரணி தரப்பு தாக்கல் செய்திருந்த மனு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தமானி அறிவுறுத்தளுக்கு எதிரான குறித்த மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து, கம்பனி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எனவே, வர்த்தமானி அறிவித்தலின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு இ.தொ.கா சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்கள் இதுவிடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . ” – என்றார்.