மதுபோதையில் வாகனங்கள் செலுத்திய பதினொரு பேர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நீதிபதி அவர்களுக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு, அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களையும் மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு 09-04-2021ல் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுளை வாகன குற்றத்தடுப்புப் பொலிசார், பதுளையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனைகளில், 11 வாகனங்களின் சாரதிகள் மதுபோதையிலிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
நீதிபதி முன்னிலையில் அச் சாரதிகள் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு, தமக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
நீதிபதி அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா என்றடிப்படையில், இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாவை அபராதமாக விதித்ததுடன், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
பதுளை, பசறை, ஹாலி-எலை பகுதிகளைச் சேர்ந்த வாகன சாரதிகளுக்கே, மேற்கண்ட தண்டனைகள் வழங்கப்பட்டதாகும்.
எம். செல்வராஜா, பதுளை










