கொரோனா சிகிச்சை நிலையத்தில் தீ விபத்து – 16 பேர் பலி!

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உட்பட 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறைக்கு 1 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.

இதன்பின்னர் பட்டேல் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரா கூறும்பொழுது, ஐ.சி.யூ.வில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த தீ விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், முழு விவரம் வெளிவந்த பின்னரே அவற்றை பற்றி கூற முடியும் என கூறினார்.

இந்நிலையில், அந்த மையத்தின் அறங்காவலரான ஜுபேர் பட்டேல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இது எங்களுக்கு மட்டுமின்றி, பரூச் நகர ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்ட துரதிர்ஷ்டவச சம்பவம்.

போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உதவியுடன் நோயாளிகளை நாங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது. இந்த சம்பவத்தில் 14 நோயாளிகள் மற்றும் 2 செவிலியர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதனால் தீ விபத்து சம்பவத்தில் பலி எண்ணிக்கை 12ல் இருந்து 16 ஆக உயர்ந்து உள்ளது.

Related Articles

Latest Articles