க.பொ.த. சாதாரணதரப்பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப்பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,
” க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் அதிகரிப்பதால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதிலும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களுடைய வயது முறையே 19-20 மற்றும் 25-26 வயதாகின்றது என்பது தெரியவந்துள்ளது.
இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால் உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளது.
இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமை பயக்குகின்றதென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை தடுப்பதற்காக கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைத்தல்.
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த (உயர் தரம்) பீரட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்துவதற்கும் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 03 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரித்தல்.
உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய ணு வெட்டுப்புள்ளி வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கல் மற்றும் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.
