மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்பதால், சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் எனவும் அவர் கூறினார்.
கைத்தொழில் நிலையங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் கோரினார்.
மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுட நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவற்றை தெரிவித்தார்.
கைத்தொழில் நிலையம் அல்லது அபிவிருத்தித் திட்டச் சூழலில் நோய்த் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படும் பட்சத்தில், அந்தத் தொழிற்சாலையை அல்லது திட்டத்தை ஒரேயடியாக மூடிவிடுவதற்குப் பதிலாக – சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றித் தொடர்ச்சியாகப் பேணுவதற்கான சூழல் குறித்துக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
உரிய சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி, கைத்தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், பிரதேச மட்டத்தில் குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது குறைபாடுகள் இடம்பெற்றிருப்பது தொடர்பில் தெரியவந்திருப்பதனையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரதேச மட்டத்தில் விவசாயிகளின் மரக்கறி மற்றும் பழவகைகளை மேலதிக விலைக்குக் கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன், விவசாயப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்காதிருப்பது, அதனோடு தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.










