ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் பதவிப்பிரமாணம் செய்வார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13ஆம் இலக்க ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைப் பிடித்தது.
அன்று முதல் 2015 வரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒன்று ஆளுங்கட்சி இல்லையேல் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையே ஐ.தே.க. பெற்றிருந்தது. கட்சியின் எம்.பிக்களின் எண்ணிக்கையும் இரட்டை இலக்கத்திலேயே இருந்தது.
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஐ.தே.கவுக்கு மரண இடியாக அமைந்தது. தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. இதன்படி சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.கவின் ஒரு எம்.பி. மட்டும் சபையில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
