இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மிக மிக நெருக்கமான நல்லுறவுகளை மேற்கொண்டு வந்துள்ள பெசில் ராஜபக்சவிற்கு, நிதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதானது, இந்நாட்டின் மேம்பாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வரப்பிரசாதமேயாகுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பெசில் ராஜபக்ச நிதியமைச்சு பொறுப்பேற்றமை, குறித்து விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில், எமது நாட்டு அரசின் அமைச்சரவையில் பெசில் ராஜபக்ச இல்லாமை இருந்தமையானது, பெரும் குறைபாடாகவே இருந்ததும், மட்டுமல்லாமல் வெற்றிடமாகவும் இருந்தது. அவ்வெற்றிடமும், குறைபாடும் தற்போது நீங்கப்பெற்றிருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் நெருக்கடிகளை நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியிருக்கின்றனர். கோவிட் 19 தொற்று, சேதனப்பசளை விடயம், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தலை விரித்தாடிக்கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலையில் பெசில் ராஜபக்ச, நிதி அமைச்சில் பொறுப்பை ஏற்றமை வரவேற்கத்தக்கதேயாகும். நாட்டை எவ்வகையில் மீட்டெடுக்க முடியுமென்பதை, பெசில் ராஜபக்ச நன்றாகவே உணர்வார். ஏற்கனவே, அவர் அமைச்சராக இருந்த வேளையில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை சகலரும் பாராட்டக்கூடிய வகையில் மேற்கொண்டிருந்தமை இந்நாடும் நாட்டு மக்களும் நன்கறிவர்.
அவ்வகையில் படு பாதாளத்தில் விழுந்திருக்கும் நிலையினை அவராலேயே மீட்டெடுக்க முடியும். இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பெசில் ராஜபக்சவிற்கு இருந்து வரும் நல்லுறவுகளை மென்மேலும் மேம்படுத்தி, அந்நாடுகளின் அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ள கூடிய அரிய வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அவ் அனுகூலங்களையும் பெசில் ராஜபக்சவினால் மட்டுமே முடியுமென்பதை, நான் ஆணித்தனமாக கூறிக்கொள்கின்றேன். பெசில் ராஜபக்ச, சர்வதேச ரீதியில் பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டு, அந் நாடுகளின் பேரபிமானங்களையும் பெற்றுக்கிருக்கின்றார்.
அத்துடன் இந்நாட்டின் சகல தரப்பினர்களுடன் நல்லுறவுகளையும் மேற்கொண்டுள்ளார். அவரை எவருமே விமர்சிப்பது கிடையாது. பெசில் ராஜபக்ச என்பவர் ஒரு திறமைசாலி மட்டுமல்லாது ஏனையவர்களையும் மதித்து நடக்க கூடியவர். அரசியல் சாணக்கியமிக்க அவரது சேவை இந்நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அத்தேவையுணர்ந்து அவர் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவருடைய இப்பிரவேசமானது இந்நாட்டிற்கு ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் பெசில் ராஜபக்ச அமைச்சு பொறுப்பை ஏற்ற உடனேயே அவருக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை










