ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 486 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஆளுனர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய பாடசாலை அதிபர்களின் தலைமையில் பிரதேச சபையினர், பிரதேச செயலகத்தினர், பெற்றோர் பங்கேற்புடன் தொற்று நீக்கம் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறும்,

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் பாடசாலைகளுக்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யுமாறும் ஆளுனர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதனை உறுதிப்படுத்துமாறும், மாணவர்களின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் எனவும் நேற்று நடைபெற்ற ஊவா மாகாண கல்விக் குழு கூட்டத்தில் ஆளுனர் கண்டிப்பான உத்தரவுளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்தார்.
