தமிழ் அரசியல்கைதிகள் அரச பாதுகாப்பில் உள்ளனர் அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாக நாமே பொறுப்புக்கூறவேண்டியிருக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை சிறைச்சாலையில் நடந்துகொண்ட விதம்குறித்து விசாரணை நடத்தி அந்த அறிக்கையை உரிய அதிகாரிகளிற்கு நீதியமைச்சு வழங்கும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு கிடைத்ததும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது குறித்து என்னுடன் கலந்துரையாடியுள்ளார் நான் இந்த விடயத்தில் தலையிட நினைக்கவில்லை என தெரிவித்துள்ள அலி சப்ரி சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் நான் கலந்துரையாடினேன் அவர்கள் யாழ்ப்பாணம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களின் ஊர் எமக்கு அங்கு உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிவித்தார்கள் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் தங்களுக்கு அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை நான் மீண்டும் மீண்டும் தமிழ் மொழியில் உரையாடினேன் அவர்கள் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக என்னிடம் ஒரு தடவை கூட தெரிவிக்கவில்லை
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










