” தேர்தல்தான் முடிவடைந்துள்ளது. எனது அரசியல் பயணம் முடியவில்லை. எனவே, வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் அக்கறையுடன் வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். கொழும்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் கணிசமான அளவு வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அத்துடன் தமிழ் பேசும் சமூகம் 70 சதவீதம் தமது வாக்கினை பதிவு செய்துள்ளமை பாராட்டதக்க விடயம்.
பாராளுமன்றத் தேர்தல் சுமூகமாக இடம்பெறுவதற்கும், தனக்கு ஆதரவளித்த கொழும்பு மாவட்ட பொது மக்கள், கட்சித் தலைமை, ஆதரவாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, மக்கள் ஆணையைப்பெற்றே எனது அரசியல் பயணம் தொடரவேண்டும் என நினைக்கின்றேன். எனவே, தேசியப்பட்டியல் வாய்ப்பை கோரமாட்டேன். அடுத்து நடைபெறும் மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன், மக்கள் ஆதரவை பெறுவேன்.” – என்றார்.