” அரச பங்காளிக்கட்சிகள் அழுது, புலம்பி ஊடக கண்காட்சியையே நடத்திவருகின்றன. மாறாக இதுவரை ஒரு போராட்டத்தைக்கூட அக்கட்சிகள் நடத்தியது கிடையாது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசிலுள்ள பங்காளிக்கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அறிவிப்புகளை விடுத்தாலும், அமைச்சரவைக்கூட்டத்தில் ஒன்றும் கதைப்பதில்லை. எமது நாட்டுக்கு எதிரான உடன்படிக்கைகளுக்கு எதிராக ஒரு வழக்கைக்கூட தொடுத்தது கிடையாது. வளங்களைக்காக்க போராடுவதும் இல்லை.

எனினும், ஏதேனும் ஓர் வாய்ப்பு கிடைத்தால், தமக்கு கவனிப்பு இல்லை, தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படுவதில்லை, பேச்சுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றெல்லாம் அழுது புலம்புகின்றனர். இவர்களுக்கு தன்மானம் மற்றும் அரசியல் தனித்துவம் இருக்குமானால் இவ்வாறு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அரசியிலிருந்து வெளியேறலாம்.” – என்றார்










