aபதுளை மாவட்டம் உள்ளிட்ட மலையக மரக்கறி விவசாயிகள் தமக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத் தரும்படி கோரி, ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திற்கு நீண்ட மகஜரொன்றை அனுப்புவதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
பதுளை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவரும், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமாக ஜயந்த கன்னங்கர, பதுளைப் பணியகத்தில் 22-11-2021ல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இச் சந்திப்பில் பதுளை மாவட்டம் மற்றும் மலையக விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் ஊடக சந்திப்பின் போதே, ஜயந்த கன்னங்கர மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
” நாட்டின் அனைத்து துறைகளும், இன்று முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தள்ளன. விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களும் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளினால் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட மரக்கறி விவசாயிகள் செய்வதறியாத நிலையில் இருந்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் 100க்கு 40 வீதமானவர்கள் மரக்கறி விவசாயத்தை மேற்கொள்ள, 60 வீதமானவர்கள் மலையக முழுதுமான மரக்கறி விவசாயிகளாவர்.
அரசின் பிடிவாதக் கொள்கைகளை ஸ்திரப்படுத்த முனைகின்றனர். இதனால் விவசாயிகள் இன்று நடுத்தெருவிற்கு வந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு பசளை வகைகளையோ, இரசாயக கிருமி நாசினிகளையோ பெற்றுக்கொள்ள முடியாதுள்ளன. பசளை வகைகள், கிருமிநாசினி வகைகள் இன்றி மரக்கறி விவசாயத்தை மேம்படுத்த முடியாது.
ஆனால், ஆட்சியாளர்களும், சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் விவசாயிகளினதும், மக்களினதும் அவல நிலையை கண்டும் காணாதவர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் வாயைத் திறந்தால் பொய்யும், புரட்டுகளுமாகவே உள்ளன. இவர்களின் உபதேசம் எமக்குத் தேவைப்படாது.
எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. எமக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத் தருமாறு கோரி நீண்டதொரு மகஜரைத் தயாரித்துள்ளோம். இம் மகஜரை, ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திற்கு விரைவில் அனுப்ப ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். இதைத் தவிர மாற்று வழிகள் எமக்கு கிடையாது. எமது வேதனைகளையும், எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூற ஜெனிவா மனித உரிமை ஆணையகமே உள்ளது. ஆகவே தான் அவ் ஆணையகத்திற்கு எமது குறைகளை மகஜர் மூலம் சமர்ப்பிக்கவுள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.
எம். செல்வராஜா, பதுளை