இன்று நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகும் ரயில் நிலைய அதிபர்கள்

நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரயில் பொது முகாமையாளர் கடிதம் மூலம் நேற்று(25) தொழிற்சங்கங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழிற்சங்க துறையினருடன் இன்று(26) முற்பகல் தொலைக்காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினர் கடந்த தினங்களில் பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தனர்.

இதன் காரணமாக ரயில் திணைக்களத்திற்கு நாளாந்தம் 5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles