பதினைந்து கிலோ கோதுமை மாவை குறைந்த விலையில் வழங்கினால் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முறையான தீர்வை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு கிலோ 80 ரூபா வீதம் 15 கிலோ கோதுமை மாவை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென பஸில் அறிவித்திருந்தார். இதனை ஒரு வேடிக்கையான அல்லது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை அறியாது வெளியிட்டுள்ள கருத்தாகவே பார்க்க வேண்டியுள்ளது.
முழு நாட்டு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் வருமானம் குறைந்த தரப்பாகவுள்ள பெருந்தோட்ட மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. உரப் பிரச்சினையால் உற்பத்திகளையும் செய்ய முடியாதுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மாத வருமானம் 10 முதல் 15ஆயிரம் ரூபாவாகவே காணப்படுகிறது. 1000ரூபா சம்பளம் அதிகரிப்பு வழங்கப்பட்ட போதிலும் கம்பனிகள் அந்தத் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்பதுடன், பல தோட்டங்களில் வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. வருமானம் இல்லாது வாடும் பெருந்தோட்ட மக்களுக்கு 15 கிலோ கோதுமை மாவை வழங்கினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?.
4 பேர் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 54ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக்காக தேவையென கடந்த ஆண்டே ஆய்வுகளால் கூறப்பட்டது. இவற்றை நிதி அமைச்சர் கருத்திற்கொள்ள வேண்டும். வருமானம் குறைந்த தரப்பாகவுள்ள பெருந்தோட்ட மக்கள் உட்பட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து தரப்பினரும் திருப்தியடையக்கூடிய பொருளாதாரத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்;;. அதேபோன்று வினைத்திறனற்ற அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிபுணர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வினைத்திறன் வாய்ந்தாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










