2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (18) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல், பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல், குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல்,
விநியோகித்தல், பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குதல் அதுபோன்ற மாதிரி வினாக்களை வழங்குதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.










