உலக சாதனை படைத்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று மலையகத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இளைஞர்களுக்கான வேலைத் திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே முரளிதரன் மலையக விஜயம் அமைந்துள்ளது.
இதன்படி ஹட்டன், ராகலை, கொத்மலை ஆகிய பிரதேசங்களில் மூன்று இளைஞர் மையங்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. ‘கிராமிய இதயத் துடிப்பு வலுவூட்டல் மையம்’ என்ற பெயரில் இவை இயங்கும்.
பாடசாலை மாணவருக்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய வகுப்புக்களும், பாடசாலையை முடித்த இளைஞர்களுக்கு ஆங்கிலம், மேசை பந்து ஆகிய பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக யுவதிகளுக்கு, தையல், சமையல் உள்ளிட்ட மொத்தம் 9 பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இவை அனைத்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மலையக இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, முரளிதரனின் பங்களிப்புடன் நற்குண முன்னேற்ற அமைப்பினால் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மலையக குருவி உள்ளிட்ட இளைஞர் குழுவினர் வேண்டுகோளுக்கு அமைய சுமார் 50 லட்ச ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், நேரடியாக பாடசாலை மாணவருக்கு வழங்கப்பட்டது.
முரளிதரன் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறி இதனை பல அரசியல் வாதிகள் தடுக்கவும் முற்பட்டனர். எவ்வாறாயினும். பல தடைகளுக்கு மத்தியில் அந்த செயல்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

கல்வி மட்டுமே சமூக வளர்ச்சிக்கு வழி என்பதை உறுதியாக நம்பும் ‘குருவி” உள்ளிட்ட இளைஞர் குழுவினர் கேட்டுக்கொண்டதுக்கு அமைய மூன்று இளைஞர் மன்றங்கள் தற்போது ஆரம்பிக்கப்படுகின்றன.
அரசியல் ரீதியாக அல்லாமல் சமூக ரீதியான இந்த பணிக்கு முத்தையா முரளிதரன் உள்ளிட்ட நற்குண முன்னேற்ற அமைப்பின் பணிப்பாளர் குசில் பெரேராவுக்கும் குருவி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.











