மிரிஹான ஆர்ப்பாட்டம் தீவிரவாத செயற்பாடு என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையாக மாற்றப்பட்டமை குறித்து அரசாங்கத் தரப்பில் செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மிரிஹான ஆர்ப்பாட்டத்தை அடிப்படைவாத செயற்பாடு என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் தீவிரவாத செயற்பாடு என்று அமைச்சர் கூறினார்.
இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், நீண்ட நாட்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ள நிலையில், தீவிரவாத செயற்பாடுகள் நாட்டில் இருப்பதாக கூறுவது அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஆர்ப்பாட்டத்தை கவனித்தால் அதனை தீவிரவாத செயற்பாடு என்று கூறாமல், எவ்வாறு கூறுவது என்று கேள்வியெழுப்பினார்.
தீவிரவாத கும்பல் ஒன்று நாட்டின் முதல் பிரஜையின் (ஜனாதிபதியின்) வீட்டை முற்றுகையிட வருவது புலனாய்வுப் பிரிவிற்கு தெரியாதா என்று கேட்கப்ட்டபோது, பொதுமக்கள் என்ற போர்வையில் அடிப்படைவாதக் கும்பல் ஒன்று புகுந்து மக்களை குழப்ப முயற்சிப்பதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
குறுகிய அரசியல் லாபம் கோருவதற்காக மக்களின் போர்வையில் இந்த அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மக்கள் தற்போது பாரிய நெருக்கடி மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் வீதிகளுக்கு வர ஆரம்பித்துள்ள நிலையில், இவற்றைத் தடுப்பதற்கு சதிக் கும்பல்கள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் களமிறக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.










