பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றிருந்தால், 04 ஆம் திகதி முதல் நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
இப்பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால் இரகசிய வாக்கெடுப்புமூலம் தேர்வு இடம்பெறும். ஆளும் மற்றும் எதிரணி சார்பில் இருவர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபையில் விசேட அறிவிப்பொன்றையும் அன்றைய தினம் விடுக்கவுள்ளார்.
இவ்வார நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










