திங்கள் முதல் தனியார் பஸ் சேவை முடங்கும்

எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இந்தவாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கட்கிழமையில் முதல் தனியார் பஸ் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்ததுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வற் உட்பட பல வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பஸ் தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மீண்டும் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பஸ்களுக்கு டீசல் பெறுவதற்கு பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles