வாய்மூலமாக உறுஞ்சி, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடுமென காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.
பதுளை, பொது வைத்தியசாலையின் 30 வயதுடைய வைத்தியர் ஒருவர், நேற்று கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் எக்மோ இயந்திர உதவியுடன்சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வேறு நோய்கள் இல்லாத, புகைப்பழக்கமற்ற 30 வயதான இந் நபரின் நுரையீரலுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தாம் ஆச்சரியமடைந்ததாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சில காரணங்கள் உள்ளன. அண்மைக் காலமாக பெற்றோல் வரிசையில் காத்திருந்த அவர், சரியாக உணவு உட்கொண்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. மழையிலும், வெயிலிலும் அவர் வரிசையில் காத்திருந்துள்ளார்.
அத்துடன், ஒரு வாகனத்திலிருந்து இன்னுமொரு வாகனத்துக்காக, வாய்மூலம் எரிபொருளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அனைத்து காரணங்களினால், அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கும். தற்போதைய காலத்தில் பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியமானகும்.
பெற்றோலிலுள்ள இரசாயனத்தினால், நுரையீரல் பாதிக்கப்படலாம். சிறு பற்றீரியா அல்லது வைரஸ் உடலினுள் சென்றால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும்போது, இதுபோன்ற நிலைமை ஏற்படலாமென வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.










