இரண்டு கட்சிகளும் இணைந்து அரசமைப்பதே இன்றைய தேவை

பிரிந்து, பிளவு பட்டு நாட்டை ஆட்சி செய்யும் கலாசாரம் தோல்வி கண்டுள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்து அதன் மூலமான ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களே இன்று நாட்டின் தேவையாக உள்ளதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நான் ஆறு கேள்விகளை பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரிய வசத்திடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலையும் வழங்கவில்லை.

நான் தெரிவித்துள்ள கருத்தை அவர் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். அது தவறு. நான் தெரிவித்த கருத்தல்ல. நான் ஆறு கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளேன் இதுவரை அவர் அதற்கு பதில் வழங்கவில்லையென்பதே உண்மை.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை கட்சிக்குள் நடந்ததென்று அவர் கூறியுள்ளார். அவ்வாறானால் அது எப்போது நடந்தது? யாரெல்லாம் அதில் கலந்து கொண்டனர்.? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு அவர் இன்னும் பதில் வழங்கவில்லை.

தற்போது ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெரும தெரிவு செய்யப்பட்டுள்ளமை உங்கள் கட்சியின் தீர்மானமா? அல்லது தனிப்பட்ட தீர்மானமா? என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்:

இல்லை, எமது கட்சியின் பெரும்பாலானவர்கள் டளஸ் அழகப்பெரும மீது பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்த்தே நாம் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும். மக்கள் கருத்தே பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும்.

தற்போது நாட்டு மக்களின் கருத்து என்னவென்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர். அதற்கு இது சிறந்த ஆரம்பமாக முடியும். புதுவிதமாக இந்த நாட்டை நிர்வகிக்க கூடிய வேலைத் திட்டங்கள் அவசியம். அதுவே மக்களின் தேவையும் அவசியமாகவும் உள்ளது.அதற்கு ஏற்பவே நாம் பாராளுமன்றத்தில் செயல்பட வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்கிணங்கவே நான் ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை முன்மொழிந்தேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles