ஒரு லட்சம் கி.மீ வீதி நிர்மாணம் 2024இல் நிறைவு! வீதிகளின் இருபுறமும் 20 இலட்சம் மரக் கன்றுகள்!!

“ஒர் இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024இல் நிறைவு செய்து, அவற்றை முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளேன்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து குடிமக்களதும் உரிமையாகும்.

போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்புகள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு எனது ‘சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒர் இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்.

சிறிய பாலங்கள், மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 8,000 கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையான அளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வழங்கியுள்ளேன்.

வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்லியல் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

நிர்மாணப் பணிகளுக்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாது என்பதனையும் நான் தெரிவித்தேன்.

வீதி நிர்மாணப் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் ஒப்பந்தக்கார்கள் ஆகிய இருதரப்பினருக்கும் உரியது ஆகும்.

உப ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்டினேன்.

அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” – என்றார்.

அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles