பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேருக்கு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரகால தடை உத்தரவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் தலைவருக்கு காலம் குறிப்பிடப்படாத தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த சுகாதார கற்கைநெறிப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் 70 பேர் பேராதனைக்கு சுற்றுலா வந்ததோடு ஹந்தானை மலையையும், மகாவலி கங்கையையும் பார்வையிட்டு இரவு பேராதனைப் பல்கலைக்கழக ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார பீட சிற்றூண்டிச்சாலையில் தங்கியுள்ளனர். இதுதொடர்பில் ஏற்கனவே பேராதனை மாணவர்கள் பீடாதிபதியிடம் முன் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அதை மீறி தங்கவைக்கப்பட்டமையால் இதில் ஈடுபட்ட ஐந்து மாணவர்களை இரண்டுவாரம் ஒத்திவைக்கப்ட்ட இரண்டு வார பல்கலைக்கழக தடையுத்தரவு பீட ஒழுக்காற்று குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து புதன்கிழமை இப்பீட மாணவர்கள் செனட் கட்டடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததோடு உபவேந்தரை சந்திக்க நேரம் கோரியுள்ளனர். உபவேந்தர் மறுத்தமையால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உபவேந்தருக்கு எதிராக தகாத வார்த்தைகளால் உரையாற்றியுள்ளனர்.
இதனால் இப்பீடத்தின் மாணவர் தலைவருக்கு காலம் குறிப்பிடப்படாத தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.










