சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார்.
இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும் எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த செயற்திட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அடுத்த வருடம் முதல் விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதரப்பு கூட்டுப் பொறிமுறையை அமுல்படுத்துவது, அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தியடைந்த சமூகத்துடன் வளமான மாவட்டமாக மாற்றுவது என்பன மூலம் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
