பசறைப்பகுதியில் அமைந்திருக்கும் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலைக்கு தேவைப்படும் வைத்தியர்களை பெற்றுக்கொள்ளும்படி, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்,’ கொக்காகலை, பட்டாவத்தை, கல்லுள்ளை, டூமோ போன்ற பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்கள் பலவற்றுக்கு மத்தியில் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலை அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தமிழ்,சிங்கள மக்களின் சுகாதார சேவைகளை, இவ்வைத்தியசாலையே மேற்கொண்டு வருகின்றது.
இவ் வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு நான்கு வாட்டுக்களும் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரு வைத்தியர் மாத்திரம் இருந்து வருகின்றார்.
இவ் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கமைய தேவையான வைத்தியர்கள் கடமைகளில் இருக்க வேண்டும். வைத்தியர்கள் பற்றாக்குறையால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். ஆகவே வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களை, உடன் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.










