” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை. எமது ஆட்சியில் இதனை செய்வோம். மாறாக ரணிலின் ’13’ விளையாட்டில் சிக்குவதற்கு நாம் தயாரில்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” தமக்கான உரிமைகள் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பன தமிழர்களுக்கு முக்கிய விடயங்களாக உள்ளன. இவை அவர்களுக்கு வலியை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளாக உள்ளன. ஆனால் மக்களின் இந்த வலியை விளையாட்டு பொருளாகவே ரணில் உணர்வார். ஒரு உதைப்பந்தாட்டம் போலவே கருதுவார்.
அதுமட்டுமல்ல அரசியல் களத்திலே தனது அரசியல் விளையாட்டை முன்னெடுப்பதற்காக அந்த பந்தை அவர் தற்போது பயன்படுத்துகின்றார். ரணிலின் இந்த களத்தில் நாம் இறங்க வேண்டுமா? ‘கோல் கீப்பராக’ செயற்பட வேண்டுமா? அதற்கு நாம் தயாரில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மொட்டு கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஒன்றாக அரசில் உள்ளனர். இவர்கள் ஒன்றாக கையொப்பமிட்டு 13 குறித்த உறுதிமொழியை வழங்கட்டும். அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். தற்போது என்ன நடக்கின்றது? வழங்குவேன் என்கிறார் ரணில். மஹிந்த அணி வேண்டாம் என்கிறது. தினேஷ் குணவர்தனவின் பிக்குகள் வீதியில் இறங்குகின்றனர். இப்படியான சண்டையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் நாம் ஈடுபட வேண்டுமா?
எமது நிலைப்பாடு என்ன? மாகாணசபை முறைமையோ, 13 பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்ககூடிய புதியதொரு அரசமைப்பு, மக்கள் கருத்து கணிப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும். ” – என்றார்.
