மாட்டு லொறியை கடத்தியோருக்கு மறியல் – மாடுகளை கொண்டுவந்தவர்களுக்கும் சிக்கல்!

பசு மாடுகளை ஏற்றிவந்த லொறி ஒன்றினை கடத்தி 60 ஆயிரம் ரூபா கப்பம் பெற்ற நான்கு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் நிலன்த விமலரட்ண உத்தரவிட்டார்.

நாவலப்பிட்டி, கெட்டப்புலா பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருக்கே இவ்வாறு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று பசு மாடுகளை போகாவத்தை பிரதேசத்திலிருந்து அப்புகஸ்தலாவ பகுதிக்கு கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் செவ்வாய்கிழமை (07.03.2023) 10.30.மணியளவில் கெட்டப்புலா பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நான்கு பேரடங்கிய குழுவினர் பாதையை மறித்து சாரதியை தாக்கிவிட்டு குறித்த லொறியினை கடத்தியுள்ளனர்.

பின்னர் லொறியினை விடுவிக்க ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு பின்னர் அறுபது ஆயிரம் ரூபா பெற்றுகொண்டு லொறியில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காப்பட்டினையும் அபகரித்துகொண்டு இரவு 3.30. மணிக்கு விடுவித்ததாக தெரிய வருகிறது

கடத்தல் காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட லொறி மீண்டும் பயணித்த சந்தர்ப்பத்தில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து ருவன்புர பிரதேசத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியதில் குறித்த பசு மாடுகள் அனுமதி பத்திரமின்றி கொண்டு சென்றமை தெரியவந்ததையடுத்து மேலதிக நடவடிக்கைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு மேற்கொண்ட விசாரணையிலிருந்தே மேற்குறிப்பிட்ட கடத்தல் விடயங்கள் தெரியவந்துள்ளது

இதன் போது அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவரையும் பொலிஸார் நாவலப்பிட்டி நீதி மன்றில் ஆஜர்படுத்திய பொழுது நபர் ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரேந்திர கலுகம்பிட்டிய தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டுவருகின்றன.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles