” மாகாண சபைகளைப்போல தற்போது உள்ளாட்சி சபைகளும் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் வந்துள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கும் எவரும் இந்த போக்கை அனுமதிக்கமாட்டார்கள். எனவே, இந்நிலைமை மாற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதான அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தேர்தல் நடத்தப்படும் காலப்பகுதியை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அக்கட்சி இடித்துரைத்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளரான சாகர காரியவசம், கட்சியின் சார்பில் மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.
” ஜனநாயக சமூக கட்டமைப்பில் ஒரு இடத்தில் அதிகாரம் குவிந்து கிடக்காமல், அதிகாரம் பகிரப்பட வேண்டும். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திடம் அதிகாரம் குவிந்து இருக்காமல் அதனை பகிரும் வகையிலேயே மாகாணசபை மற்றும் உள்ளாட்சிசபை முறைமை உருவாக்கப்பட்டது.
மாகாண மற்றும் பிரதேச மக்கள் தமக்கு தேவையான விடயங்களை தமது பிரதிநிதிகள்மூலம் செய்வதற்கு இது வழிவகுத்தது. மக்களுக்கு சேவை வழங்காத பிரதிநிதிகளை ஒதுக்கி, புதியவர்களை உள்வாங்கவும் தேர்தல் நடத்தப்பட்டது.
நாட்டில் தற்போது மாகாணசபைகள் செயற்பட்டாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ஊடாகவே நடவடிக்கை இடம்பெறுகின்றது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடைய நடவடிக்கை அல்ல. ” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
மக்களுக்காக உருவாக்கப்பட்ட சபைகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம்.
ஒன்று மாகாணசபைகள் கலைக்கப்பட வேண்டும். இல்லையேல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆளுநரின்கீழ் நிர்வாகம் இடம்பெறுவது ஏற்றுக்கொள்ள கூடிய விடயம் அல்ல. அன்றும் இன்றும் என்றும் எமது இந்த நிலைப்பாடு மாறாது. ” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் எடுத்துரைத்தார்.
உள்ளாட்சிசபைகளும் தற்போது அரச அதிகாரிகளின் ஆளுகையின்கீழ் வந்துள்ளது. அதாவது மாகாணசபைகளும், உள்ளாட்சிசபைகளும் தற்போது ஜனாதிபதி ஆட்சியின்கீழ் உள்ளன.
2016 இல் மைத்திரிபால சிறிசேன உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்தார். இதனால் 300 வீதத்தால் டெங்கு மரணம் அதிகரித்தது. நகரங்களில் குப்பைகள் குவிந்தன.
தேர்தலை நடத்த நிதி இல்லையென அரசு கூறுகின்றது. இதற்கான நிதி விரைவில் திரட்டப்ப வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தினார்.
